இவ்வார கிரீடம் பெறுபவர் (26 -10 -09 ) முதல் (01 -11 -09 )

http://www.etiroli.blogspot.com/
1.உங்களைப் பற்றி சுருக்கமாக சில வரிகள் ?
கிராமத்தின் இயற்கை எழிலோடு வாழவிரும்பும் ஒரு சாதாரண தமிழ்க்குடிமகன். படிப்பிற்காகவும், வேலை நிமித்தமாகவும் பலஊர், பலநாடுசுற்றியும் கூட இன்னமும் திருப்தியளிக்காமல் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தேடிக்கொண்டேயிருக்கும் ஸ்டில் பேச்சுலர் (அப்பாடா சைடு கேப்லஒரு மேட்ரிமோனி விளம்பரம்)
2.நீங்கள் வலைப்பதிவு எழுத வந்ததன் நோக்கம் ?
நோக்கமெல்லாம் ஒன்றும் இல்லை. நம்முடைய கருத்து நாலு பேருடன் ஒத்துப் போகிறது என எண்ணும் போது நாம் சொல்வது சரிதான் என்றஒரு நிம்மதி பிறக்கிறது. உன் சகோதரனுக்குத் தீங்கிழைக்கப்படும் போது நீ பொங்கியெழுந்தால் நாம் தோழர்களே என்ற சேகுவேராவின் வரிகள்கூட உதாரணம். என்னுடைய உள்ளக்குமுறலை பதிவிட்டு அதற்கு சில பின்னூட்டங்களும், ஓட்டுக்களும் கிடைக்கும் போது அதிலே இருக்கும்திருப்தியே நம் பாதைசரிதான் என எண்ணத்தோன்றும்.
3.உங்களின் பதிவுகளை சக பதிவர்கள் விமர்சிக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் ?
இதுவரை எந்தப் பதிவரும் என்னை விமர்சிக்கவில்லை. காரணம் இதுவரை நான் எழுதிய விசயங்களின் சாராம்சம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஒருவேளை இனி ஏதாவது சர்ச்சைக்குரிய இடுகையொன்றை எழுதி அதை சகபதிவர்கள் விமர்சித்தால் அதுஎன்னை சுய பரிசோதனை செய்துகொள்ளவே உதவும். விமர்சனங்கள் தவறை சுட்டிக்காட்டுவதேயன்றி விமர்சனங்களே தவறில்லை. ஆனால்அதுவும் ஒரு வரையறைக்குட்பட்டு இருப்பது நல்லது. (யாருக்கு?…….,யாருக்கோ…!)
4.பதிவுலகிற்கு வந்ததன் மூலம் நீங்கள் அடைந்த நன்மை மற்றும் தீமைகள் ?.
பதிவுலகிற்கு வந்தபிறகு எனக்கு பலமுகம் தெரியாத நண்பர்களின் அறிவுரையும் பாராட்டுக்களும் பின்னூட்டங்களாகவும் ஓட்டுக்களாகவும்கிடைக்கின்றன. இந்த வலைப்பூவில் எழுதும் எழுத்து மூலமாக நேரடியாக முடியாவிட்டாலும் மகிந்த ராஜபக்சேயின் சட்டையைக் கூட பிடித்துஉலுக்க முடியும். ஒரு அதிகார வர்க்கத்திடம் சொல்ல நினைக்கக் கூடிய நமது எண்ணத்தையும்,நமது ஆதங்கத்தையும் எழுத்துக்களாகவெளிப்படுத்தினால் அது யார் மூலமாவது எப்படியாவது சென்று சேர்ந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. இது நன்மை. தீமை இதுவரை இல்லை.
5-வலை உலகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பதிவர்கள் யார் ? யார் ?
வம்பில் மாட்டிவிடக்கூடிய கேள்வி. குறிப்பிட்டுச்சொல்லும் படியாக5 பதிவர்கள் அல்ல 50 பதிவர்களைக் கேட்டாலும் பட்டியல் போதாது.ஒவ்வொரு பதிவரிடமும் ஒவ்வொரு ஃபயர் இருக்கிறது. எனவே மற்றவரை எந்த வகையிலும் புண்படுத்தாத அனைத்துப் பதிவர்களின்எழுத்துக்களும் பிடிக்கும். இருந்தாலும் நான் அதிகம் படிக்கும் பதிவர்களின் பதிவுகள். 5 அல்ல. 7 சொல்லலாம்.
1) ராகவன் நைஜீரியா. இந்த அண்ணனின் நட்பு வட்டாரம் மிகப் பெரியது. ஒரு இடுகை போட்டால் நூறு பின்னூட்டத்திற்கு மேல் வாங்கும்அன்புள்ளம். அசராமல் அனைத்துப் பதிவர்களின் பதிவுகளிலும் அண்ணனின் பின்னூட்டம் அதிரடியாய் இருக்கும்.
2) அன்புடன் மலிக்கா. எங்கிருந்து தான் இவருக்கு கவிதையின் கருக்கள் கிடைக்கிறதோ தெரியவில்லை. கவிதை மழையை விடாமல்பொழிகிறார். எனக்கு சாப்பாட்டிற்கு பிறகு பிடித்தது நல்ல கவிதைகள் என்பதால் இவரின் கவிதைகள் பிடிக்கும்.
3)தமிழ் நெஞ்சம். அண்ணனின் தொழில்நுட்பம் சம்பந்தப் பதிவுகள் நன்றாக இருக்கும். அண்ணனின் சிரித்த முகம் அனைவருக்குமே பிடித்தஒன்று.அதிகபட்சம் என் இடுகைக்கு முதல் ஓட்டுப் போடும் சிறந்த வாக்காளர்(ஹி..ஹி)
4) நண்பர் அ.மு.செய்யது. இவரின் கதைகள் படிப்பதற்கு மிக சுவாரஸ்யமாக இருக்கும். கதைக்கருக்கள் இதுவரை கேள்விப்படாத விதத்தில் இருப்பது சிறப்பு. நிறைய நண்பர்களை கொண்டவர்.
5)வானம்பாடிகள். அண்ணன் சமூக அக்கறை கொண்ட பதிவர். அண்ணனின் பதிவுகள் மட்டுமின்றி பின்னூட்டங்களிலும் ஆங்காங்கே அனல்பறக்கும்.
6)மாதவராஜ் அண்ணனின் தீராதபக்கங்கள். சமூக அக்கறை மட்டும் கம்னியூச சிந்தனை கொண்ட பதிவுகள் மிகமிகப் பிடிக்கும். சிறந்தசிந்தனையாளர் எதையும் விடாமல் படித்துவிடுவேன்.
7)நண்பர் நிஜாமின் பல்சுவை விருந்து எனக்குப் பிடிக்கும். அவர் எழுதும் காமெடிகள் அதிகபட்சம் புதுமையாக இருக்கிறது. எங்கிருந்தான்பிடிக்கிறாரோ தெரியவில்லை.
6-எதிர் காலத்தில் பத்திரிகை , தொலைகாட்சி போன்று வலைப்பதிவும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்றுநம்புகிறீர்களா ?…
அதற்கேன் எதிர்காலத்திற்குப் போக வேண்டும்? இப்போதே அது சாத்தியமாகிவிட்டது என்பது தான் உண்மை. இப்போதெல்லாம் ஒரு பதிவைசாதாரணமாக 3000 பேர் வரை பார்வையிடுகிறனர், பெரிய அளவிலே விவாதம் நடைபெறுகிறது. இந்தநிலையே வலைப்பதிவும் தற்போதுஊடகத்துறையில் நுழைந்துவிட்டது என்பதற்கு ஒரு சிறந்த அத்தாட்சி.ஒரே ஒரு குறை வலைப்பதிவு இணையம் வழியாக மட்டுமே படிக்கமுடியும் என்பதால் அது இன்னமும் சாமானிய, நடுத்தர வர்க்கத்தினரைச் சென்றடையவில்லை என்பதும் நிஜம். ஒருவேளை அதையும்மாற்றும் தொழில்நுட்பம் விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
7-புதிதாக பதிவுலகத்திற்கு வரும் பதிவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை ?
3 மாதக்குழந்தையிடம் சென்று பந்தயத்தில் ஓடும் வீரர்களுக்கு அறிவுரை சொல் என்பதைப் போன்றது இந்தக் கேள்வி. நானும் புதிய பதிவர்தானே! இருந்தாலும் எனக்கென்ற வரைமுறைகள் சில இருக்கின்றன. அதைக் கூட அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம்.
1) இடுகையின் நீளம் முடிந்த அளவு குறைக்கப் படவேண்டும். அதேநேரம் அதன் சுவை குறைந்துவிடக்கூடாது.
2)தலைப்பை மட்டும் பிரமாதமாக திரட்டிகளில் கொடுத்து விட்டு உள்ளே ஒன்றுமேயில்லாமல் இடுகையைப் போடுவது என்பது, போஸ்டரைபிரம்மாண்டமாகப் போட்டுவிட்டு அதைப் பார்த்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்றால் அங்கே எதுவுமேயில்லாமல் ஏமாந்து இடைவேளையோடுஎஸ்கேப் ஆகும் ரசிகர்கள் நிலை போல ஆகிவிடும்.
3)பிறரை புண்படுத்துதல்,ஆபாசம் அறவே தவிர்க்கப் படவேண்டும்.
4)உறுதிப்படுத்தப் பட்ட உண்மை செய்தியை மட்டுமே இடவேண்டும்.
8 – தமிழ்10 தளம் பற்றிய உங்கள் கருத்து
பதிவர்கள் தயாரிப்பாளர்கள். திரட்டிகள் வினியோகஸ்தர்கள். என்னதான் சுவையான பொருளைத் தயாரித்தாலும் அதற்குரிய விளம்பரவினியோக யுக்தி இருந்தால் தான் அந்தப் பொருள் சந்தையிலே நிலைபெறும். அதேபோல இன்றைய நிலையில் பதிவர்களின் பதிவுகளைவிளம்பரப்படுத்தி வெளியிடுவதில் திரட்டிகளின் பங்கு இன்றியமையாதது. அந்த வகையில் பதிவர்கள் மனதில் தமிழ்10 எப்போதுமே டாப்10க்குள் இருப்பது உண்மை. உங்களின் சேவை பதிவர்களுக்குத் தேவை. தொடர்க தமிழ்ப்பணி.
9-நீங்கள் இவ்விருதினை பதிவுலகத்தில் யாருக்கு குடுக்க விரும்புவீர்கள்? (அதிகபட்சம் நான்கு பேர் வரை கூறலாம் , அதில்இருந்து ஒருவர் அடுத்த வார கிரீடம் பெறும் பதிவராக அறிவிக்கப்படுவார் )
மேலே குறிப்பிட்டவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
10 – இறுதிக் கேள்வி உங்கள் வாழ்வின் இலட்சியம் ?
1990** பஸ் டிரைவராக ஆகவேண்டும்
1998** டாக்டராக வேண்டும்
2000** கலெக்டராக வேண்டும்
2003** வழக்கறிஞராக வேண்டும்
2005** ஆசிரியராக வேண்டும்
2007** அரசு ஊழியராக வேண்டும்
2009** டிவி சேனல் டைரக்டராக வேண்டும் (இதுவாவது நடக்குமா???)
தமிழ் தளத்துடன் சேர்ந்து நீங்களும் இவ்வார கிரீடம் பெற்ற சக பதிவர் நிஜாமை வாழ்த்துங்கள் .

